அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் மழை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் மீண்டும் மழை மிரட்ட தொடங்கியுள்ளது.
நிவாரண பொருட்கள் வழங்கி வரும் இந்த சமயத்தில் மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், ”தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில், குறைந்த காற்றழுத்த நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியில் 10 சென்டி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.கனமழையைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்துவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு, 31 சென்டி மீட்டர். இந்தக் காலக்கட்டத்தின் சராசரி அளவு 35 செ.மீ ஆகும். இது இயல்பைவிட 12 சதவிதம் குறைவு' என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.