டெல்டா பகுதியை சேர்ந்த 5 மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்களை முறியடிக்கும் திட்டமா? என கேள்வி எழுந்திருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் காவிரி பிரச்னை, மீத்தேன் எரிவாயு திட்டம் ஆகியவை தொடர்பாக அதிகமான போராட்டங்கள் நடந்தபடி இருக்கின்றன. இந்தச் சூழலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் திடீரென நேற்று (ஏப்ரல் 29) முதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மத்திய அதிவிரைவு படையினரில் ஒரு பகுதியினர் நேற்று கும்பகோணம் வந்தனர். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிவிரைவு படையினர் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்தும் ஊர்களுக்கு சென்று வருவதற்கான மாற்று பாதைகள் குறித்தும், பதற்றமான இடங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.
கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிக்கான துணை போலீஸ் சூப்பிரண்டுகளையும் மத்திய அதிவிரைவு படையினர் சந்தித்து பேசினர். அப்போது அந்தந்த ஊர்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அதிவிரைவுபடையினர் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவை சேர்ந்த அதிவிரைவு படை வீரர்கள் கும்பகோணம் வந்துள்ளனர். இவர்கள் கோவையில் உள்ள 105-வது படை பிரிவை சேர்ந்தவர்கள். உதவி கமாண்டர் வி.எப்.கிளாரன்ஸ் தலைமையில் 40 வீரர்கள் கும்பகோணத்துக்கு வந்து, பதற்றம் நிலவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர்’ என்றார்.
மே 3-ம் தேதி காவிரி பிரச்னை தீர்வு குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. அதில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலான அம்சம் இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் என மத்திய அரசு உணர்ந்திருக்கிறது.
குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டியே முன் எச்சரிக்கையாக டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.