காவிரி டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ‘துணை ராணுவத்தை ஆளுனர் அழைத்தாரா?’ என டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அவர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள். கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு தகவல்களை விசாரித்தனர்.
காவிரி வழக்கில் மே 3-ம் தேதி தமிழ்நாட்டுக்கு நியாயமான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதபட்சத்தில் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கக்கூடும். தவிர, மீத்தேன் எரிவாயு பிரச்னையில் டெல்டா மாவட்டங்களில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களை முறியடிக்கவே டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பான LIVE UPDATES
பகல் 12.00 : டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ட்விட்டரில் இதற்கான ‘ஹேஷ்டேக்’களையும் உருவாக்கி டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
பகல் 11.00 : மார்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘காவேரி டெல்டாவில் துணை ராணுவம்? யார் அழைத்தது? மாநில அரசா?, மாண்புமிகு ஆளுநர் ? தன்னிச்சையாக மத்திய அரசு அனுப்பியதா.. எதுவும் நல்லதுக்கு இல்லை..’ என குறிப்பிட்டிருக்கிறார்
காலை 10.00 : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது. எச்சரிக்கை கொள் தமிழா! ’காசுமீராகிறது தமிழ்நாடு’ இந்திய துணை ராணுவம் டெல்டாவில் இறக்கப்பட்டதை தலைவர்கள் கண்டிக்கவேண்டும். ராணுவம் வெளியேற போராடவேண்டும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.