சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறவயலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. ஆறாவயலில் இருந்து தேவகோட்டை சாலை வரை நடந்த இப்போட்டியில், பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், மொத்தம் 22 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இந்த பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்காக 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்காக 6 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை நோக்கி மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் சென்றன.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் விடாமுயற்சியுடன் எல்கையில் கொடியை கைப்பற்றிய மாடுகளின் உரிமையாளர்களுக்கும் வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், சீறிப் பாய்ந்த மாட்டுவண்டிகளை உற்சாகமாக பாராட்டிக் கண்டுகளித்தனர்.