சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்கும் என்று தெரிவித்துள்ளார்..
முதல்வர் பழனிசாமி சிவகங்கை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 4) அரசின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற அரசு பணிகளை திறந்து வைத்தார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “சிவகங்கையில் 6,486 பேருக்கு வீட்டுமனை பட்ட வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்ட உதவிகள் மூலம் 7457 பேருக்கு 23 கோடி 32 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் 97.35 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்னை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுக்காக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி குடிநீர் பெற சிவகங்கை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய சாதிகளை உள்ளடக்கி என்ற தேவேந்திர குல வேளாளர் ஒரே பொதுப் பெயரில் பெயரிடக் கோரி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றது. இக்கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைவராகக் கொண்டு 04.03.2019 அன்று குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு அரசால் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.
இக்குழு இந்த நேர்வுக்கு தொடர்புடைய பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று மேற்குறிப்பிட்ட 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்.
மேலும் தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட தற்போது 7 சாதி உட்பிரிவிலும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரும் என்று இக்குழு பரிந்துறைத்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் இப்பிரிவினர் ஏற்கெனவே பெற்றுவரும் சலுகைகள் தொடரும் இதற்கான ஆணைகளை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கும். மாநில அரசின் பரிந்துரையின் மீது மத்திய அரசிடம் இருந்து ஆணை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”