கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்தக் கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலுக்கு கேரள மாநிலத்தில் இருந்து குறிப்பாக கொல்லம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி பகவதி அம்மனை தரிசிப்பது வழக்கம்.
இந்த கோவிலுக்கு ரயில் மார்க்கமாக வரவேண்டுமானால் இரணியல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேருந்துகளில் திங்கள்நகர் வழியாக மண்டைக்காடு செல்ல வேண்டும். மண்டைகாடு கோவில் மாசி திருவிழா மார்ச் 05-ம் தேதி முதல் மார்ச் மாதம் 14-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கீழ் குறிப்பிடப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குமரி மாவட்ட மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆற்றுகால் பொங்கல் திருவிழாவுக்கு தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு ரயில்களையும், ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தங்களையும் பல ஆண்டுகளாக செய்து வருகிறது.
இவ்வாறு செய்வதை போன்று அதே கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் மண்டைகாடு கோவில் திருவிழாவிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் – நாகர்கோவில் வழி மார்க்கம் இயங்கும் நாகர்கோவில் – மங்களுர் ஏரநாடு, திருநெல்வேலி-பிலாஸ்பூர், திருநெல்வேலி- ஜாம்நகர், கன்னியாகுமரி – திப்ருகர், நாகர்கோவில் – காந்திதாம், நாகர்கோவில் – சாலிமார் போன்ற அனைத்து வராந்திர ரயில்களுக்கும் இருமார்க்கமும் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் இரணியல் ரயில் நிலையத்தில் ஓரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம் என்று குமரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/