குட்கா வழக்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனை டிஸ்மிஸ் செய்யும் படி திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் காட்டம்:
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மொத்தம் 40 பகுதிகளில் சிபிஐ இன்று காலை முதல் போலீசார் ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் விஜய்பாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சி.பி.ஐ. ரெய்டு தமிழகத்துக்கே தலைக்குனிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுக் குறித்து ஸ்டாலின் கூறியிருப்பது, “தமிழக டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம்பெற்றுள்ள அனைத்து காவல்துறையினர் வீட்டிலும் சோதனை நடத்தியது தமிழகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. டைரியில் இடம்பெற்றுள்ள அனைவரது வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியதை வரவேற்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.