நடிகர் தனுஷ் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால், செலுத்த வேண்டிய தொகையை முழு தொகையை செலுத்துங்கள் என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாரன நடிகர் தனுஷ் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். நடிகர் தனுஷ் தான் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரியாக 60.66 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று வணிகத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தனுஷ் சார்பில், சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நடிகர் தனுஷ் வாங்கிய சொகுசு காருக்கு வரிவிலக்கு கோரிய வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் காரை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. தனுஷ் தனது சொகுசு காருக்கான நுழைவு வரித்தொகையில் 50 சதவிகிதத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் செலுத்தவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், தனுஷ் தரப்பில் நுழைவு வரிசெலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்ட வகையில் 30.33 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல், 2016ம் ஆண்டு விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கான சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, நடிகர் தனுஷ் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன் படி, நடிகர் தனுஷ் சொகுசு கார் தொடர்பான வழக்கு இன்று (05.08.2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொகுசு காருக்கான வரித்தொகையில் பாதியை ஏற்கெனவே செலுத்திவிட்டதாகவும் மீதித் தொகையையும் செலுத்தத் தயாராக உள்ளதாக கூறினார். அதோடு, இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கூறினார்.
தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் கோரிக்கையைக் கேட்ட நீதிபதி, “இந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் நிலுவையில் இருக்கிறது. அப்போதெல்லாம் நீங்கள் இந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் என முடிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், நீங்கள் இந்த வழக்கை முடித்துக் கொள்ள எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இந்த வழக்கை இழுத்தடிக்க நினைப்பதின் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினார், மேலும், “நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள். பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக ரூ.50க்கு பெட்ரோல் போடும் சாமானியர்கூட வரி செலுத்தி வருகிறார்கள்.” என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொடர்ந்து பேசிய நீதிபதி, வழக்கறிஞர்தான் உங்கள் தரப்புக்கு எடுத்துக் கூறவேண்டும். மனுதாரர் தான் என்ன வேலை செய்கிறார் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை. உயர்தர சொகுசு கார் வாங்கும் மனுதாரரால் தான் என்ன வேலையில் இருக்கிறோம், என்ன தொழில் செய்கிறோம் என்பதைக் குறிப்பிட முடியாதா? அதை ஏன் மறைத்தார் என்பது குறித்து ஒரு மனுத் தாக்கல் செய்யவேண்டும். தனுஷ் செலுத்தவேண்டிய வரிப் பாக்கி எவ்வளவு என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.” என்று உத்தரவிட்டார்.
மேலும், நடிகர் தனுஷ் தான் வாங்கிய உயர்தர சொகுசு காருக்கு இன்னும் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் சொகுசு கார் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம்தான் நடிகர் விஜய் வாங்கிய சொகுசு கார் தொடர்பான் வழக்கையும் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”