/indian-express-tamil/media/media_files/opMsXp6fksYckOGRhSPa.jpg)
அடுக்குமாடி குடியிருப்பில், பொதுவான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி, சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகர் தனுஷின் தாய் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி நகர் ராஜமன்னார் தெருவில் கோல்டன் அப்பார்ட்மெண்டில் நடிகர் தனுஷின் தாய் விஜயலட்சுமி வசித்து வருகிறார். நடிகர் தனுஷின் தாய் விஜயலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு, நுஷ்ரத் அபிதா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி மேல்தளத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதை குடியிருப்புவாசிகள் தடுப்பதாகவும், தரைத்தளத்தில் உள்ள நடிகர் சரத்குமார் சட்டவிரோதமாக பொது பகுதியை ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், மற்றும் செந்தில்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன், கிஸ்தி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுப்பதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை மாநகராட்சி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.