/indian-express-tamil/media/media_files/kLPF4rnvIbw9yt1W9O2h.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 8-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பி.பள்ளிபட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா
ஆலயத்திற்கு சென்றார். அண்ணாமலை அங்கு சென்ற நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞர்கள், அண்ணாமலை ஆலயத்திற்குள் வரக் கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர்.
மேலும் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு அண்ணாமலைக்கும், கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. மேலும் ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா? என்று தம்மை தடுத்து நிறுத்தியவர்களிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் அண்ணாமலை ஆலயத்திற்குள் சென்று மாதா சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தார். இளைஞர்கள் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மீது பொம்மிடி காவல் துறையினர் வழக்குப் பதிவு
செய்துள்ளனர். பொம்மிடி காவல் நிலையதில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.