தர்மபுரி மாவட்டத்தில் தீபாவளிக்காக வீட்டிற்கு வந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்துள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவி, பாப்பிரெட்டிபட்டி விடுதியில் தங்கி ப்ளஸ் டூ படித்து வந்தார். கடந்த 2-ம் தேதி முதல் தீபாவளிப் பண்டிகை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு அந்த மாணவி வந்திருக்கிறார்.
தர்மபுரி மாணவி பாலியல் வன்கொடுமை :
கடந்த 5-ம் தேதி மாணவியின் பெற்றோர் ஆடுகளை மேய்க்கக் காட்டுக்குச் சென்றநிலையில், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ், சதீஸ் இருவரும் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் அலட்சியமாகத் தட்டிக் கழிக்கவே, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் எண்ணான 1077-க்கு அழைத்து புகாரைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதன்பிறகே கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
மாணவி பலி
தொடர் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு மாணவியை அழைத்துச் சென்றபோது உடல் அளவில் அவர் மிகவும் பலவீனமாக இருந்துள்ளார். மருத்துவப் பரிசோதனை முடியும் வரை பெண்கள் விடுதியில் தங்கி இருக்கட்டும் என்று அரசு தரப்பில் பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்படவே, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷ், சதீஸ் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள். பலியான மாணவியின் உடல் இன்னும் பெற்றோர்களிடம் கொடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்
மாணவியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி சிட்லிங்கிராமத்தில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்த மாணவியின் பெற்றோறை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி. மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட நிர்வாகிகள் கே.சுசிலா, மீனாட்சி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி, நடந்தவற்றை கேட்டறிந்தனர்.
விடுமுறை நாளில் தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வந்த மாணவியை இந்த நிலைக்கு தள்ளிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.