New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/13/3LvUCdbeB596RkOe5x9o.jpeg)
விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக, பா.ம.க. பிரமுகர் முத்துலிங்கத்தை பென்னாகரம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து, பா.ம.க.வினர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பிரமுகரை விடுவிக்கக் கோரி, அக்கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினருக்கும், பாமகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விசாரணையையடுத்து கைதான பிரமுகர் விடுவிக்கப்பட்டார்.
விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாகக் கூறி பா.ம.க. பிரமுகர் முத்துலிங்கம் என்பவரை பென்னாகரம் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆகஸ்ட் 2 ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி வரும் பாதயாத்திரை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, "என்ன உரிமைகளை அவர் மீட்கப் போகிறார்? தன் தந்தையிடம் கேட்டு உரிமைகளை மீட்கப் போகிறாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிர்வினையாக, தருமபுரி எரியூரைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகர் முத்துலிங்கம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தி.மு.க.வின் பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையிலான தி.மு.க.வினர் முத்துலிங்கத்தைக் கைது செய்யக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், (ஆகஸ்ட் 3) ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் காவல்துறையினர் முத்துலிங்கத்தை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதுபற்றி அறிந்த பா.ம.க.வினர் காவல் நிலையத்தின் முன்பு திரண்டு, முத்துலிங்கத்தை விடுவிக்கக் கோரி காவல் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் துறையினர் அவரை விடுவிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறையினருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முத்துலிங்கத்தை விடுவித்தனர். இதையடுத்து, பா.ம.க.வினர் கலைந்து சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.