தங்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் ” ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ” பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார்கள்.
அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளதாக கூறி, கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால்
காவல்நிலையத்தில் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், எவரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை தாங்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி.ஆர்.பாலு மற்றும் தயாநித் மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த புகார் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவரும் அனுமன் சேனா அமைப்பை சேர்ந்தவர் என்பதால் அரசியல் உள்நோக்குடன் புகார் அளித்துள்ளார். ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை கோரிதான் தலைமை செயலாளரை சந்தித்தோம். ஆனால் அவரோ எங்கள் கோரிக்கைகள் மீது மதிப்பளிக்கவோ அல்லது எங்களை முறையாக நடத்தவோ இல்லை. அதனால் சபாநாயகரை சந்தித்து முறையிட்டோம். தலைமை செயலாலரின் அறவுறுத்தலின்படியே எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நடராஜன் தன்னுடைய வாதத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் நடந்து பேசியுள்ளதால் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவே இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், கோவையில் பதிவான வழக்கில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் வழக்கை எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க கூடாது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என காவல்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதி மனு தொடர்பாக பதில் அளிக்கவும் காவல்துறை தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“