சிறையில் சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்த நிலையில் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை என சசிகலாவின் தம்பி திவாகரன் குற்றம் சாட்டினார்.
மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதால், நேற்று பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டர். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் சசிகலா ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஊடகத்திடம் பேசிய சசிகலா தம்பி திவாகரன், " கடந்த ஒரு வாரமாக காய்ச்சலில் இருந்துள்ளார். உரியமுறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 20 ம்தேதி மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் தான் சசிகலா உடல்நலக் குறைபாடு குறித்த தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பிறகுதான், முறையாக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவுக் குறைய தொடங்கியதாக தெரிய வருகிறது. எனவே, கோவிட்- 19 நோய்த் தொற்றாக இருக்கலாம். எனவே, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெறுவது நல்லது. இன்னும், ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள நிலையில் இவ்வாறு நடந்திருப்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சிகிச்சையை தாமதப்படுத்தியுள்ளனர். துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்று தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.
பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சசிகலா உடல்நலப் பாதிப்பால் விடுதலையில் மாற்றமில்லை என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், ” சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது, குடும்ப உறுப்பினர்களிடம் முறையாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 27ம் தேதி விடுதலைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனெனில், சிறையில் உள்ள ஒரு நபருக்கு மருத்துவ சிகிச்சையளிப்பது சிறைத்துறையின் பொறுப்பு. சிறைத்துறையின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் தான் தற்போது சசிகலா இருக்கிறார். அந்த அடிப்படையில், மருத்துவமனை அனுமதி கூட சிறை வாசகத்துக்கு உட்பட்டதுதான். எனவே, 27ம் தேதி விடுதலையில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
வரும், 27-ம் தேதி காலை சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சசிகலாவிடம் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா நெகட்டிவ் என்ற செய்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களிடையே நிம்மதியை எற்படுத்தியுள்ளது.