முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் திமுக தலைவர் கருணாநிதி விழுந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிவரும் வரும் வீடியோவைப் பற்றிய உண்மைத் தன்மையை தெரிந்துகொள்வோம்.
பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களைத் தாண்டி கோலோச்சும் சமூக ஊடகங்களின் காலத்தில், வாசாகர்கள், பார்வையாளர்கள் எது உண்மையான செய்தி, எது பொய்யான செய்தி என்று பிரித்தறிவதில் மிகவும் குழப்பமான நிலையில் உள்ளனர். எந்த ஒரு தகவலையும் சரிபார்த்து வெளியிடுவதும் அப்படி வெளியிட்ட செய்திகளின் நம்பகத் தன்மைக்கு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் பொறுப்புடையவை. ஆனால், சமூக ஊடகங்கள் அப்படியல்ல. எந்த தகவலையும் அவர்கள் உடனடியாக வெளியிட்டு பரப்புகிறார்கள். அந்த தகவலின் உண்மைத் தன்மை பற்றி சமூக ஊடக பயனர்கள் எந்த அக்கறையும் கொள்வதில்லை. அப்படி, சமூக ஊடகங்களில் செய்தியாக பரப்பப்படும் தகவல்களை சமூக ஊடக பயனர்கள் உண்மை என்று நம்பி பகிர்ந்து பரப்புவது என்பது நடந்து வருகிறது. இதனால், சமூக ஊடகங்களில் நாளொரு பொய் செய்திகளும் பொழுதொரு வதந்திகளுமாக பரவி வருகிறது.
அந்த வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி விழுந்ததாக குறிப்பிடு ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது. உண்மையில், கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்தாரா? இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது. அதை இப்போது யார் பரப்பினார்கள்? என்ற பல கேள்விகளுக்கு விடை காண்போம்.
காலில் விழுந்த கவரிமான்… மான் மான் மான் ???? pic.twitter.com/yeSvWTCpZC
— Madan Ravichandran (@MadanRavichand4) October 10, 2020
சமீபத்தில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் கோவை சத்யன், இந்திரா காலில் விழுந்து கருணாநிதி வணங்குகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து பேசினார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகவைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டண்டைன் இந்த வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று சத்யனிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், கோவை சத்யன் அதற்கு பதில் அளிக்கவில்லை. இப்படி தான், சமூக ஊடகங்களில் பரவி வந்த இந்த வீடியோ கவனம் பெற்றது.
உண்மையில் கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்தாரா? என்றால், இல்லை. இந்த வீடியோவில் இருப்பது இந்திரா காந்தி அல்ல. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் ஆவார்.
சென்னை – அண்ணா அறிவாலயத்தின் திறப்புவிழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் துணைவியார் திருமதி ராணி அண்ணா அவர்களிடம், தலைவர் கலைஞர் அவர்கள் ஆசி பெற்றார்;
அந்த வீடியோவை திரித்து – மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள்!#AdmkFails pic.twitter.com/HExqGzUAf4
— #DMK4TN (@DMK4TN) October 20, 2020
கருணாநிதி காலில் விழுவது போன்ற வீடியோ DMK4TN என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சென்னை அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவில், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் காலில் விழுந்து தலைவர் கலைஞர் ஆசி பெற்றார். அந்த வீடியோவை திரித்து மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
” 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி இனமான பேராசிரியர் அவர்கள் தலைமையில் , தலைவர் கலைஞர் அவர்களால்
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது ”பின் குறிப்பு :1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியே இந்திரா காந்தி மறைந்தார் என்பதும் வரலாறு… pic.twitter.com/1jQp0U4SV3
— திராவிடன் பிரபு????❤️ (@priyamanavanskl) October 20, 2020
உண்மையில், இந்த வீடியோ, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில், திமுக தலைவர் கருணாநிதியால் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, கருணாநிதி அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் காலில் விழுந்து ஆசி பெற்றபோது பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரா காந்தி மறைந்தார் என்பதும் வரலாறு. சமூக ஊடகங்களில் தீயாக பரவிய பொய் செய்தி அம்பலமாகியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Did karunanidhi fall at the feet of indira gandhi video fact check