தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கிற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
இந்நிலையில், இன்று வெளியான ஒரு பிரபல தமிழ் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவான தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. அதனை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தமிழ் நாளிதழ் அதன் தலையங்கத்தில் "காலை உணவு திட்டம்; மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு! ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது" என்று குறிப்பிட்டு இருந்தது.
தலையங்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
"கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil“