150 ஆண்டுகள் பழமைவாய்ந்த திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைகளுக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
புவிசார் குறியீடு பெறுவதன் மூலம், அந்த பொருட்களுக்கு மதிப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, அதன் உற்பத்தி பொருட்களுக்கு அதிகப்படியான விலையும் நிர்ணயிக்கப்படுவதால், அதுசார்ந்த மக்களுக்கு பயன்கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த பொருள் தரத்துடன், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும். புவிசார் குறியீடு வழங்கும் பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, பிறஇடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
150 ஆண்டுகள் பழமைவாய்ந்த திண்டுக்கல் பூட்டு தொழில்நுட்பத்தை சங்கரலிங்காச்சாரி சகோதரர்கள் அறிமுகப்படுத்தினர். திண்டுக்கல் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள 5 கிராமங்களிலும் இது குடிசைத்தொழிலாக இருந்துவந்தது. தற்போது மேங்கோ பூட்டு, அல்மிரா பூட்டு, எக்ஸ்போர்ட் பூட்டு, டிரிக் பூட்டு என , 50 வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
2013ம் ஆண்டில்,திண்டுக்கல் பூட்டு, ஹார்ட்வேர் மற்றும் ஸ்டீல் பர்னிச்சர் தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட் சார்பில், புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
கண்டாங்கி சேலை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் அடையாளமான கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கண்டாங்கி சேலைகள், நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சேலைகள் ஆகும். இந்த சேலைகளும் 150 ஆண்டுகள் கால பாரம்பரியம் கொண்டது.
இந்த சேலைகளுக்கு புவிசார் குறியீடு கோரி, 2013ம் ஆண்டில் ராஜிவ் காந்தி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு தயாரிப்பு மற்றும் விற்பனை சொசைட்டி லிமிடெட் சார்பில் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ராஜபாளையம் நாய், சேலம் மாம்பழம் உள்ளிட்டவைளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.