திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த சியாமளாதேவி தற்போது ரெட்டியார்சத்திரம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ராஜேஸ்வரி, காயத்ரி, நந்தினி, மாலினி, ரேவதி, செல்வராணி, லிங்கேஸ்வரன் ஆகிய 7 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக முன்பணமாக ரூ.20 லட்சம் பெற்றுள்ளார்.
ராஜேஸ்வரி, நந்தினி காயத்ரி ஆகியோரை தான் பணிபுரியும் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு தனித்தனியாக அழைத்து, போலியாக நேர்காணலை சியாமளாதேவி நடத்தி நாடகமாடி உள்ளார். மேலும் லிங்கேஸ்வரனுக்கு சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேர்காணல் நடக்க உள்ளதாக கூறி அரசு முத்திரையுடன் கூடிய கடிதத்தை தயாரித்து போலியாக ஆணையர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார். பணம் வாங்கி 2 வருடம் ஆகியும் யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்காததால் சந்தேகம் அடைந்த
பணம் கொடுத்தவர்கள். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி குமரேசன் தலைமையிலான போலீசார் சியாமளாதேவிக்கு விசாரணைக்கு வருமாறு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சியாமளாதேவியை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். சியாமளாதேவி ரெட்டியார்சத்திரம் அரசு கலைக் கல்லூரியில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்து: க.சண்முகவடிவேல்.