பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பென்ராஜ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த முக்கிய கோப்புகளை தணிக்கைக்கு உட்படுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆதார் அட்டையை சரிபார்த்த பின்னர்தான் பத்திரப் பதிவு நடைபெறுகிறது; இந்த விஷயத்தில் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள பின்பற்றுகின்றன” என்றார்.
மேலும், “இது வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வுதான். பத்திரத்துக்கு களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அதில் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போலி மற்றும் முறைகேடான பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் உள்ளது. இந்த அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அதிகாரம் தொடர்பாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் தீர்ப்பு வந்த பின்னர் விரிவான நடவடிக்கை எடுக்கப்படும்.
இணைய வழியில் பத்திரப் பதிவு கொண்டுவரப்பட்டுள்ளதால் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மை ஏற்பட்டுள்ளது. காலிமனை இடங்களை பதிவு செய்யும்போது அந்த இடத்தை புகைப்படம் எடுத்து அளிக்க வேண்டும். இது அக்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் காலிமனையின் நிலை தெரிந்து கொள்வதோடு முறையற்ற தவறான ஆவணப்பதிவு தடுக்கப்படுகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“