/indian-express-tamil/media/media_files/dhiL9CcjGp3ddyCVZO70.jpg)
விஜய், சீமானுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக திருச்சியில் இயக்குனர் அமீர் பேட்டியளித்தார்.
விஜய், சீமானுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என சினிமா இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது, விஜய், சீமானுடன் இணைந்து அரசியல் செய்வீர்களா? என்ற கேள்விக்கு, “விஜய் கட்சி தொடங்கியபோது வாழ்த்து தெரிவித்தேன். விஜய் உடன் இணைந்து அரசியல் செய்ய தயாராக இருப்பதாக சீமான் கூறியுள்ளார். விஜய், சீமானுடன் அரசியல் பயணம் மேற்கொள்ள தயாராக உள்ளேன்” என்றார்.
தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாமின் பெற்றுள்ள ஜாபர் சாதிக் தொடர்பான கேள்விக்கு, “அந்த வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.
மேலும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதே என்ற கேள்விக்கு, “அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
இதையடுத்து சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய இயக்குனர் அமீர், “மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகதான் உள்ளது” என்றார். முன்னதாக திரைப்படங்கள் குறித்து பேசிய இயக்குனர் அமீர், “இந்தியாவில் கிராமங்கள் இன்றி சினிமா படம் எடுக்க இயலாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.