Director Balakrishnan wife actress sandhya murder case Details: தமிழகத்தை உறைய வைத்த சந்தியா கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சந்தியாவின் குடும்ப பின்னணி நிலவரங்களும் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் சிக்கிய வழக்கில் நேற்று (பிப்ரவரி 6) துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண், தூத்துக்குடி சந்தியா என்பது தெரிய வந்தது. அவரை கொலை செய்ததாக சந்தியாவின் கணவர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு காதல் இலவசம் என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டவர்.
sandhya murder case: தூத்துக்குடி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சந்தியா சுயேட்சையாக போட்டியிட்டார்.
கொலை செய்யப்பட்ட சந்தியா குறித்து பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவரது பிறந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம்.
சந்தியாவுக்கு, உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர். அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தியாவின் பெற்றோர் ஞாலத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.
சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். அவருடைய பெற்றோர் ஊரில் சிறிய டீக்கடை நடத்தி வருகின்றனர். எனவே குடும்ப வறுமை காரணமாக 7-ம் வகுப்புடன் சந்தியா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தரகர் ஒருவர் மூலமாக கிடைத்த தொடர்பில் தூத்துக்குடி பாலகிருஷ்ணனுக்கு சந்தியாவை திருமணம் செய்து கொடுத்தனர்.
sandhya murder case: சந்தியா கிரியேஷன்ஸ் சார்பிலேயே தனது படத்தை பாலகிருஷ்ணன் ரிலீஸ் செய்தார்.
பாலகிருஷ்ணன், சினிமாவில் உதவி இயக்குனராக உள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு காதல் இலவசம் என்ற பெயரில் அவரே படம் தயாரித்து வெளியிட்டார். தனது மனைவி பெயரில் சந்தியா கிரியேஷன்ஸ் சார்பிலேயே அந்தப் படத்தை அவர் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
சந்தியா குழந்தைகளுடன் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசித்து வந்தார். சந்தியாவுக்கு மாயவரதன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் மட்டும் சென்னையில் வசித்து வந்தார். அவர் அடிக்கடி தூத்துக்குடி வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தார்.
சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர். பாலகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நகர பாமக செயலாளராக பொறுப்பு வகித்தார். அந்த வகையில் சந்தியாவுக்கும் அரசியல் தொடர்புகள் கிடைத்தன.
sandhya murder case: சந்தியா சென்னையில் வெளியே செல்வதும், அதை பாலகிருஷ்ணன் தடுப்பதும் தொடர் கதையாக நடந்திருக்கிறது.
பாலகிருஷ்ணன் அரசியலை விட்டு சினிமாவுக்கு வந்த பிறகும் சந்தியாவுக்கு அரசியல் தொடர்புகள் தொடர்ந்தன. கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சந்தியா சுயேட்சையாக போட்டியிட்டார். அதிலிருந்து அவரது நடவடிக்கைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். எனினும் அரசியல் தொடர்புகள் நீடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்தார். இதற்கிடையே தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பிறகும் பாலகிருஷணனும், சந்தியாவும் ஒன்றாக வாழ முயற்சித்தார்கள். சினிமா ஆசையில் அவ்வப்போது சந்தியா சென்னையில் வெளியே செல்வதும், அதை பாலகிருஷ்ணன் தடுப்பதும் தொடர் கதையாக நடந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் பாலகிருஷ்ணன் இந்தக் கொலையை கொடூரமாக அரங்கேற்றியிருக்கிறார்.

