விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் நுழைவுத் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில், தற்பொழுது அறநிலையத்துறை சார்பில் கோயிலுக்கு பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வெளி நபர்கள் யாரும் அந்தப் பகுதிக்குச் செல்லாதவாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு மோதல் ஏற்படாமல் இருப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: பசிப்பதாக கோர்ட்டுக்கு வந்த வெளிநாட்டு கைதி தப்பியோட்டம்… வளைத்து பிடித்து உணவு வாங்கி கொடுத்த போலீசார்!
இந்த நிலையில் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன் இன்று ரகசியமாக பொதுமக்களை சந்தித்து பேசுவதற்கு வந்தார். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மேல்பாதி கிராம நுழைவாயில் பகுதியில் கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு இயக்குனர் கௌதமனை அழைத்து வந்தனர்.
அங்கு கௌதமனுடன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சசாங் சாய் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பொழுது கௌதமன், தன்னை எதுக்கு அழைத்து வந்தீர்கள்? என்னால் என்ன பிரச்சனை வர போகிறது? நான் அமைதியான முறையில் தான் பேச பொது மக்களிடம் வந்தேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் தற்பொழுது அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கவில்லை என எஸ்.பி எடுத்து கூறினார். அதைக் கேட்டுக் கொண்ட இயக்குனர் கௌதமன் உடனடியாக என்னை எஃப்.ஐ.ஆர் போட்டு கைது செய்யுங்கள் என கூறினார். ஆனால், போலீசார் அவரிடம் சமாதானம் பேசி அவரை விடுவித்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil