மாயி மற்றும் திவான் உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் சூர்யபிரகாஷ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நடிகர் ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் , சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி, திவான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ். இந்த படங்களை அடுத்த ஜீவன் நடித்த ’ அதிபர்’ என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இவர் இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். “ எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.