தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றன. அதேபோல், 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் 21 வரை காலையில் நடத்தப்பட்டன. 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் 21 வரை மதியம் தேர்வுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
அதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், அவர்களுக்கும் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் மாதம் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.