/indian-express-tamil/media/media_files/2025/06/02/zMzf6Mn4LX0uKP15LvOX.jpg)
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, நூறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட தலைவர் பி.முருகன் தலைமையில் மாநில துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் முத்துவேல் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் செல்வ விநாயகம் தலைமையிலான போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் வரும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நூறு நாள் வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். அதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கலக்கான சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
செய்தி: பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.