நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சடலத்தை உறவினர்கள் சுமார் இரண்டரை கிலோமீட்டர் ஸ்ட்ரெட்சரில் சுமந்துசென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
வேதாரண்யம் அருகே நகர பகுதிக்குட்பட்ட மணியம் தீவு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்பின், பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. மேலும், தனியார் ஆம்புலன்ஸ் வாகனமும் வருவதற்கு தாமதமானது.
இதனால், உறவினர்கள் நடராஜனின் சடலத்தை ஸ்ட்ரெட்சரிலேயே சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் வரை வீட்டுக்கு சுமந்து சென்றனர். நகரப்பகுதி வழியாக இறுதி ஊர்வலம் போன்றே சடலத்தை சுமந்து சென்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து, தற்கொலை, கொலை என பல்வேறு சம்பவங்களில் சுற்றியுள்ள கிராமங்களில் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கே கொண்டு வரப்படுகின்றன. அதனால், aங்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.