சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக இன்று மாலை வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சென்று ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாயில் வழியாக வருகை தந்த ஆளுநருக்கு கோயில் பட்டச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கினர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோயில் யானை ஆண்டாளுக்கு தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கி ஆளுநரின் குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.
திருச்சியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்கு சென்று ஓய்வு எடுக்கும் ஆளுநர், நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பிறகு அங்கு ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா மற்றும் குணசீலம் மகஹாத்மியம், வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு செல்கிறார். திருச்சியில் ஆன்மீகப் பயணமாக ஆளுநர் ரவி வருகை தந்திருப்பதையொட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்