/indian-express-tamil/media/media_files/2025/10/17/trichy-diwali-shopping-2025-10-17-17-19-00.jpg)
திருச்சி கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்: தீபாவளி ஷாப்பிங்கில் திடீர் மழையால் வியாபாரிகள் அவதி
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திருச்சி மாநகரத்தின் முக்கியக் கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. புத்தாடைகள், நகைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் திரண்டுள்ளது.
என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு, தேரடி வீதி, பெரிய கடைவீதி மற்றும் நந்திகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வெள்ளமாக குவிந்து உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும், பொதுமக்கள் இன்றே தங்கள் குடும்பத்துடன் வந்து ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். திருச்சி மாநகர மக்கள் மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் திருச்சியில் குவிந்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் சீருடை அணியாத (மறைமுக) காவலர்களும் பொதுமக்களோடு பொதுமக்களாய் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி ஷாப்பிங்கில் திடீர் திடீரென மழை குறுக்கிட்டாலும், பொதுமக்கள் தங்கள் பொருட்களை வாங்குவதில் ஆர்வமுடன் உள்ளனர். எனினும், திடீர் மழையின் காரணமாகத் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பொருட்களை எடுத்து வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.