/indian-express-tamil/media/media_files/2025/10/07/diwali-spl-bus-2025-10-07-08-32-42.jpg)
தீபாவளிக்கு 20,372 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள்- அமைச்சர் தகவல்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் மற்றும் பயண ஏற்பாடுகள் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்., 16-ம் முதல் 19-ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 4 நாட்களுக்கும் சேர்த்து 5 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 268 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6 ஆயிரத்து 110 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 20 ஆயிரத்து 378 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
இதுவரை 2 லட்சம் பேர் சிறப்புப் பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவையைச் சமாளிக்க, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 300 தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் நெரிசலைத் தவிர்க்க, வெவ்வேறு ஊர்களுக்கான பேருந்துகள் வெவ்வேறு மையங்களிலிருந்து இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, நெல்லைக்குச் செல்லும் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து ஆந்திரா, திருச்சி, சேலம், கும்பகோணத்திற்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி சிறப்பு பேருந்துகளில் செல்ல, கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும். TNSTC செயலி மற்றும் www.tnstc.in ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யலாம். போக்குவரத்து இயக்கம் குறித்த புகார்களுக்கு 94459 14436 (எந்த நேரமும் அழைக்கலாம்), ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பயணிகள் 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 044-24749002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய எண்களிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
தீபாவளிக்கு தென் மாவட்டங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் நெரிசல் இல்லாத மாற்று வழியைப் பயன்படுத்தலாம் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். தாம்பரம் - பெருங்களத்தூர் வழியைத் தவிர்த்து, ஓ.எம்.ஆர் - கேளம்பாக்கம் - திருப்போரூர் வழியாகச் சென்று போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்கலாம். மேலும், விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்பும் நாட்களில், கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணியர் வசதிக்காக, சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில், 150 இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.