தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தி.மு.க தலைமையில் நேற்று (மார்ச் 22) சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களான பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.கே. சிவக்குமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அமைகிறது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இதில் பங்கேற்கவில்லை" எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, எந்த விதமான திட்டமும் இல்லாமல், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தப்பட்டது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இது குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "சொந்த மாநிலம் மீது அண்ணாமலைக்கு அக்கறை இல்லை. பா.ஜ.க-வுக்கே விசுவாசம் காட்டுகிறார். கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் குறித்து அண்ணாமலை பேசுவது முக்கியமல்ல. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரின் கருத்தே முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. அவர் கட்சிக்கு மட்டுமே வேலை செய்கிறார். அவர் வேலையை அவர் செய்யட்டும்" என்று தெரிவித்தார்.