/indian-express-tamil/media/media_files/2025/05/04/xNb0gMWgRTsgcq4AThD3.jpg)
தே.மு.தி.க-விற்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க கூறியது முழுக்க முழுக்க உண்மை எனவும், சரியான நேரம் வரும் போது இது குறித்த அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்துவோம் என்றும், அக்கட்சி பொருளாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க உடனான கூட்டணியில் தே.மு.தி.க அங்கம் வகித்தது. அப்போது, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க-விற்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படும் என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார்.
ஆனால், தே.மு.தி.க-விற்கு ராஜ்ய சபா சீட் தரப்படும் என்று அ.தி.மு.க கூறவில்லை என்று அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் அவர் கூறினார். இதனால், தே.மு.தி.க-வினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், தே.மு.தி.க-விற்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க அங்கம் வகித்ததாக எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். அதன்படி, மாநிலங்களைவை உறுப்பினர் பதவியை பெறுவதில் தே.மு.தி.க-விற்கு விருப்பம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான முழு தகுதி தே.மு.தி.க-விற்கு இருப்பதாக கூறிய அவர், உகந்த நேரம் வரும் போது இது குறித்து பேசப்படும் என்று தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால், கூட்டணி தொடர்பான அறிவிப்பை ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என்று எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.