திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. கொ.ம.தே.க போட்டியிடும் 3 தொகுதிகளிலும் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலே போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தமிழகத்தில் ஆளும் திமுக எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் 25 இடங்களையும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது. மேலும், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் 3 தொகுதிகளையும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலைக் கட்சிக்கும் 1 இடமும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக தனது கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெறுகிறது. ஊழலால் முழுகிக்கொண்டிருக்கிற தமிழகத்தை காப்பாற்றுவதற்கும் தமிழகத்தினுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு முன்னெடுப்பதற்கும் ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வருகிற சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடும் என்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலே எங்களுடைய வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். நாங்கள் போட்டியிடுகிற தொகுதிகளில் மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் இருக்கிற அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு களத்திலே பணியாற்ற இருக்கிறோம். கண்டிப்பாக எங்களுடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழகத்தின் வளர்சியை உறுதி செய்வார்.” என்று கூறினார்.
கேள்வி: 3 தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் என்று அடையாளம் கண்டு வைத்துள்ளீர்களா? இந்த எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறதா?
ஈஸ்வரன்: “எப்போதும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாளை தெரிவிக்கப்படும். நாளை காலை அதற்கான வேலை தொடங்கும் மாலைக்குள் முடிவாகிவிடும்.
இதனிடையே, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு நேற்று ஆதரவு தெரிவித்த நிலையில், தனது ஆதரவை திரும்பெற்றார். அதே போல, முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிவித்த நிலையில், அவரும் திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் 3 தொகுதிகளைப் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் தாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.