ராமநாதபுரம் மாவட்டம் கள்ளிகுடிக்கு வருகை தந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டினர்.
ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“எஸ்சி, எஸ்டி மக்கள் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்கிறதா? என கிராமங்களில் தங்கி ஆய்வு செய்ய உள்ளேன்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக ஒன்றும் செய்ய முடியாது. மாநிலங்களிடம் கலந்தாலோசித்து வாரியம் எப்படி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அங்கிருந்து, மத்திய அரசின் திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா? மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், உள்ளிட்ட வசதிகள் சென்று சேர்ந்து இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ராமநாதாபுரம் சென்றார்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் நிர்மலாசீதாராமனின் காருக்குப் பின்னால் வந்த பாஜகவினரின் கார்கள் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டன.