/indian-express-tamil/media/media_files/2025/07/29/anbumani-ramadoss-3-2025-07-29-06-05-44.jpg)
Anbumani Ramadoss
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின், கடந்த ஐந்து நிதிநிலை அறிக்கைகளில் வெளியிடப்பட்ட 8634 அறிவிப்புகளில் இதுவரை பாதிக்கும் குறைவான திட்டங்களே நிறைவேற்றப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து நிதிநிலை அறிக்கைகளில் 8634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 4516 அறிவிப்புகள் மட்டுமே, அதாவது 52.30% மட்டுமே இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றில் 3455 திட்டங்களுக்கு வெறும் அரசாணைகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டு, பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், 256 திட்டங்கள் சாத்தியமற்றவை என்று கண்டறியப்பட்டு முற்றிலுமாக கைவிடப்பட்டிருக்கின்றன.
திட்டங்களை கிடப்பில் போடும் அரசு!
ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை அறிவிப்பும், பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே வெளியிடப்படுகிறது. அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட திட்டங்கள் இப்போது சாத்தியமற்றவை என்று கூறப்படுவது மக்களை ஏமாற்றும் செயல். கடந்த 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 236 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டும், அவை இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. அதேபோல், 2022-ல் 394 திட்டங்களும், 2023-ல் 593 திட்டங்களும், 2024-ல் 941 திட்டங்களும் அரசாணை மட்டுமே பெற்று, எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
நீட் விலக்கு முதல் 373 வாக்குறுதிகள் வரை!
தி.மு.க.வின் இந்த ஏமாற்று வேலைகள் புதியதல்ல. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத் தருவதாக 2019, 2021, 2024 தேர்தல்களில் தி.மு.க. வாக்குறுதிகள் அளித்தன. முதல் கையெழுத்து நீட் விலக்குதான் என்று கூறிவிட்டு, தற்போது மத்திய அரசுதான் விலக்கு அளிக்க முடியும் எனக் கூறி தி.மு.க. கைவிரித்து விட்டது. இதுபோல, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, மாத மின் கட்டணம், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அறிவித்து, பிறகு அவை சாத்தியமற்றவை என்று கைவிடும் தி.மு.க.வின் கொள்கையை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். ஆசை காட்டி மோசம் செய்வதுதான் தி.மு.க.வின் இயல்பு என்பதை மீண்டும் ஒருமுறை இந்த அரசு நிரூபித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.