சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அ.தி.மு.கவைச் சேர்ந்த தனித்தொகுதி எம்.எல்.ஏ ஜெயசங்கரன் தன்னை நிகழ்சியில் தி.மு.க நிர்வாகிகள் பேசவிடாமல் தடுத்ததாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு விழாவில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆத்தூர் எம்.எல்.ஏ ஏ.பி.ஜெயசங்கரனை பேசவிடாமல் தி.மு.க நிர்வாகிகள் சிலர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்சி தனித் தொகுதி எம்.எல்.ஏ-வான ஜெயசங்கரன், தன்னை அரசு விழாவில், தி.மு.க நிர்வாகிகள் பேசவிடாமல் தடுத்தது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பட்டியல் சாதிகள் / பட்டியல் பழங்குடியினருக்கான ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாத் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்க அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில், 6 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 945 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க எம்.பி பொன். கவுதம் சிகாமணி பேசினார். இவரைத் தொடர்ந்து விழாவில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆத்தூர் எம்.எல்.ஏ ஜெயசங்கரன் பேச முயன்றபோது, தி.மு.க-வினர் சிலர் மைக்கை எடுத்துச் சென்றனர்.
இதனால், விழாவில் பங்கேற்றிருந்த தி.மு.க-வினர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ தனித்தனியாக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசங்கரன், இலவச சைக்கிள்கள் வழங்கப்படாமல், பல மாதங்களாக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். சேலம் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து இந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்று கூறினர்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசங்கரன், “நான் எஸ்சி தனித் தொகுதி எம்.எல்.ஏ என்பதால், சமூக நீதி பற்றி பேசும் திமுகவினர் எனக்கு மைக் வழங்கவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்” என்று கடுமையாக விமசித்தார். “நான் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்புவேன். மனித உரிமைகள் ஆணையம் மற்றும் எஸ்சி / எஸ்டி ஆணையத்திடமும் புகார் அளிப்பேன்” என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"