சென்னையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் கே.கே.நகர் திமுக அலுவலகத்தில் இருந்தபோது அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணின் கணவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டியபோது, தடுக்க சென்ற தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன். இவர் ஏ.கே.கல்வி அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார். திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் என்பதால் திமுகவில் கே.கே.நகர் தனசேகரன் என்று பிரபலமாக அறியப்பட்டவர்.
சென்னையில் கே.கே.நகரில் தனசேகரன் வீடு உள்ளது. வீட்டிலேயே, அவரது அலுவலகமும் உள்ளது. தனசேகரனின் அலுவலகத்தில் அமுதா (34) என்ற பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். அமுதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்.
இந்த நிலையில் இன்று அலுவலகத்தில் பணியில் இருந்த அமுதாவை, அங்கே வந்த அவரது கணவர் பொன்வேல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற தனசேகரனுக்கும் கை மற்றும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த தனசேகரன் வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமுதா கே.கே. நகர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்வேலை தேடி வருகின்றனர்.
பொன்வேல் மட்டும் வந்து வெட்டினாரா? அவருடன் வேறு சிலரும் வந்தார்களா? என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில், திமுக திமுக பிரமுகம் கே.கே.தனசேகரன் அவரது அலுவலகத்திலேயே பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"