போவதா, வேண்டாமா என்பதுதான் கேள்வி. மகாபலிபுரத்திற்கு வரும் அக்.11ம் தேதி வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விருந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்புக்கு என்ன பதிலளிப்பது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும் மனப் போராட்டத்தில் உள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்துக்காக அழைக்கப்படும் ஸ்டாலின், தான் அந்நிகழ்வில் பங்கேற்றால் சிறுபான்மை சமூகங்களில் உள்ள அவரது கூட்டணி கட்சிகளிடையே விமர்சனங்களை தூண்டக்கூடும் என்று கவலைப்படுகிறாராம். பசியில் இருக்கும் ஊடகங்களில், குறிப்பாக தமிழ் தொலைக்காட்சி சேனல்களில், இது விவாதப் பொருளாகும் என்றும், பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக விமர்சிக்கப்படும் என்றும் அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் தனது மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்காக அந்நிகழ்வுக்கு போகாமல் இருந்தால், அதுவும் அரசியல் மரியாதையின் கடுமையான மீறலாக முடிவடையும் என்பதால் அவரை கவலையில் ஆழ்த்தியிருப்பதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மோடி-ஜின்பிங் விருந்துக்கு மாநில அரசின் குறைந்த எண்ணிக்கையிலான பிரமுகர்களை மட்டுமே பிரதமர் அலுவலகம் அழைத்துள்ளது. அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலமைச்சர், துணை முதல்வர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்குவர்.
பாஜக இன்னொரு பிரச்சனையிலும் ஸ்டாலினின் தூக்கத்தை சீர்குலைத்து வருகிறது. மக்களவையின் இரண்டாவது பெரிய கட்சியான திமுகவுக்கு, பாஜக அரசு மக்களவை துணை சபாநாயகர் பதவியை வழங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
திமுக மூத்த எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஏ ராஜா, எஸ்.எஸ்.பழனிமணிக்கம் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் தங்களில் ஒருவருக்கு திமுக தலைமை இந்த வாய்ப்பை அளிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால், மூன்று மாத காலமாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருக்கும்போதும், ஸ்டாலின் இன்னும் இவ்விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் குழப்பத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.
துணை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொண்டால், பாஜகவுக்கு ஏதுவாக நடந்து கொள்கிறார் என்று முத்திரை குத்தப்படும் என்ற அச்சத்தில் ஸ்டாலினின் தயங்குகிறார் என்று கூறப்படுகிறது.
"ஏற்கனவே, அமித் ஷாவின் ஹிந்தி மொழி குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் அறிவித்த திமுக, ஆளுநரின் அழைப்பை ஏற்று, ராஜ் பவனுக்கு ஸ்டாலின் சென்ற போது ஏற்பட்ட ஊகங்களையும் ஏளனங்களையும் கையாள படாதபாடு பட வேண்டியிருந்தது. 'ஹிந்தி திணிப்பு இருக்காது' என ஆளுநர் ஸ்டாலினுக்கு விளக்கமளித்த பின்னர், போராட்டத்தை திமுக கைவிடுவதாக அறிவித்த போதும், மொழிப் பிரச்சனையில் பாஜகவிடம் திமுக சரணடைந்தது என்றே பரவலாக விமர்சிக்கப்பட்டது.
ஸ்டாலினின் கவலையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் வகையில், கடந்த வியாழக்கிழமை பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "பாஜகவுடன் நாங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டால், திமுக கூட்டணி வைக்க தயாராக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.