/tamil-ie/media/media_files/uploads/2022/09/MK-Stalin-4-1-1.jpeg)
Tamil news updates
தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் 7-ந் தேதி மனுதாககல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக தொணடர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-ஆவது அமைப்புத் தேர்தல் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.
கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா உருவாக்கிய ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், தலைவர் கலைஞர் அவர்கள், சுமார் அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்த இயக்கம் தி.மு.கழகம். மாநிலக் கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது நம்முடைய இயக்கம். கழகத்தின் உள்கட்டமைப்பு ஜனநாயக முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, கண்ணை இமை காப்பதுபோல், தொடர்ந்து காக்கப்படுவதால்தான்,வலிவோடும் பொலிவோடும் திகழ்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித்திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்றுப் போற்றிப் பாராட்டுகின்ற வகையில் சீராகச் செயலாற்றி வருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது. கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, தங்களது கற்பனை எல்லையைக் காட்டும் வகையில் ஈரைப் பேனாக்கும் மட்டரகமான வேலையில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.கழகம் எனும் பேரியக்கம் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலமாக வலிமை குன்றாமல் இருப்பதும், தேர்தல் தோல்விகளைக் கடந்து மீண்டும் மீண்டும் மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சமூகநீதி மற்றும் சமத்துவ நெறி அடிப்படையிலான சட்டங்களைத் தீட்டி, தக்க திட்டங்களை நிறைவேற்றுவதும் ‘பாரம்பரியமிக்கவர்களுக்கு’ உறுத்தலாக இருப்பதன் விளைவுதான், நம்முடைய உள்கட்சித் தேர்தலில் அவர்கள் காட்டுகின்ற அதீத ‘அக்கறை’க்குக் காரணம்.
‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன், ‘சொல்லாததையும் செய்வோம்.. சொல்லாமலும் செய்வோம்’ எனப் புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்.
நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால், மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குத் தடங்கலாகும் சூழலைத் திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள்.
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்கு ஊட்டியுள்ள திராவிட உணர்வுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்திட, தமிழர்களின் வாழ்வு செழித்திட, செம்மொழித் தமிழ் செம்மாந்து திகழ்ந்திட, கழகமும் கழக அரசும் தொடர்ந்து பாடுபடும். அதற்கான ஊக்கத்தைப் பெற்றிடும் வகையில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் நாள் ஞாயிறு அன்று கூடுகிறது.
ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். ஒரு தாய் மக்களாய் - ஒரு கொள்கைக் குடும்பத்துச் சொந்த பந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம் ! தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.