பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழக வருகை தர உள்ளார். அதன்படி, அவர் நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன் பிறகு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். பிரதமர் மோடி மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க புகார் மனு
இந்நிலையில், மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தி.மு.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும் பிரதமரின் இந்நிகழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மனு
இதனிடையே, கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார்" அந்த மனுவில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ (எம்) கடிதம்
இதேபோல், மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சி.பி.ஐ(எம்) சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், " நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 30ஆம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் ஜூன் 1ஆம் தேதி தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.
ஆனால், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், அநேகமாக, நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புவது , அது மோடிக்கும் அவரது அரசியல் கட்சிக்கும் மிகப்பெரிய பிரச்சாரப் பொருளாக மாறும். இது அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வழங்குவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிக்கும் சம நிலை என்ற கருத்தை பாதிக்கும்.
மோடியும் அவரது கட்சியும் தேர்தல் நாள் வரை லைம் லைட்டில் தொடர்ந்து இருப்பார்கள். மேலும் பிரச்சாரத்தை 48 மணி நேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்வதன் நோக்கத்தை அது தோற்கடிக்கிறது. இது மாதிரி நடத்தை விதிகளை கடுமையாக மீறும் செயலாகும்.
எனவே, இந்த செய்தியை பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்புவதையும், ஒளிபரப்புவதையும் தடைசெய்து, இந்த விஷயத்தில் நீதியை வழங்க தேர்தல் ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.