தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு 4 நாட்களாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்டச் செயலாளர் பதவிக்கு கீதா ஜீவன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால், தி.மு.க-வில் உள்ள 72 மாவட்டச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கு எத்தனை என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர், அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு 4 நாட்களாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) நிறைவடைந்தது. தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பதவி முக்கிய பதவியாகக் கருதப்படுகிறது. தி.மு.க-வில் அமைப்பு ரீதியாக நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பல மாவட்டங்களில் இருந்து மாவட்டச் செயலாளர் பதவிக்கு நிர்வாகிகள் மனுதாக்கல் செய்தனர்.
அமைச்சர் கீதா ஜீவன் மீண்டும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், வேறு மாவட்டங்களில், தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட பெண் நிர்வாகிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
சமூகநீதி, பெண்களுக்கு சம உரிமை பற்றி பேசும் தி.மு.க, 72 மாவட்டச் செயலாளர்கள் பதவியில், பெண்களுக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன. ஆனால், அமைச்சர் கீதா ஜீவன் மட்டுமே திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"