திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 7-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று (7-ம் தேதி) காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலாளர்களுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியை வலுவாக முன்னெடுப்பது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டத்தில், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தும் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், விவசாயிகள்-போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கையாள்வதில் தோல்வி அடைந்த தமிழக அரசை கண்டிப்பது, மார்ச் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாளை (ஜனவரி 8) தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடர் குறித்து இன்று மாலையில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த விருப்பது குறிப்பிடத்தக்கது.