திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : திமுக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடக்கிறது.
அதில் திமுக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் செப்டம்பர் 1ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
13:00 PM: ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "மொத்தம் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, குட்கா புகாரில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
12:45 PM: திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11:00 PM: குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
10:30 AM : திமுக.வின் 65 மாவட்டச் செயலாளர்கள், 88 எம்.எல்.ஏ.க்கள், 4 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த வகையில் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்தனர்.
10:20 AM: திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு பெற்ற பிறகு அவரது தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இது ஆகும்.
10:00 AM: குட்கா விவகாரம், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வரவிருக்கும் தீர்ப்பு ஆகியன அதிமுக ஆட்சியின் ஆயுள் குறித்து சந்தேகத்தை எழுப்பியபடி இருக்கின்றன. எனவே மாநிலம் முழுவதும் பூத் கமிட்டிப் பணிகளை முடுக்கிவிட திமுக தயாராகிறது. அது குறித்தும் இன்று விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.
9:30 AM: ஸ்டாலின், க. அன்பழகன், துரை முருகன், ஐ.பெரியசாமி, விபி துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற இருக்கிறது.