திமுக.விடம் ரூ10 கோடி தேர்தல் நிதி பெற்றதாக எழுந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்திருக்கிறது. அதில் திமுக.விடம் நிதி பெற்றதை நேரடியாக ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ 15 கோடியும், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு ரூ15 கோடியும் வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் திமுக கணக்கு சமர்ப்பித்தது. இன்று இது ஊடகங்களில் செய்தி ஆனது.
இடதுசாரிகளுக்கு ரூ25 கோடி, கொங்கு கட்சிக்கு ரூ15 கோடி: சர்ச்சையில் திமுக தேர்தல் கணக்கு
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி மற்றும் செலவுகள் குறித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது, கட்சியின் மாண்பினை குலைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பொய்யான விவரங்களேயன்றி வேறல்ல.
ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மாறாக, மக்களவைத் தேர்தல் சமயத்தில் கட்சியால் பெறப்பட்ட அனைத்து நன்கொடைகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகளை உள்ளடக்கியதாகும். இதில், ஊடகச் செய்திகளில் தவறாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதைப் போல மறைப்பதற்கு ஏதும் இல்லை.
இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கணக்குகள் குறித்த அறிக்கையானது, தேர்தலின் போது கட்சியால் செய்யப்பட்ட அனைத்து செலவினங்களையும் பற்றிய விவரங்களை கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஊடகச் செய்திகளில் கட்சி செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘தொகை’ என்பது முற்றிலும் திரித்துக் கூறப்பட்ட ஒன்றாகும்.
இந்த அனைத்து விபரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் திமுக.விடம் நிதி பெற்றதை நேரடியாக ஒப்புக்கொள்ளவும் இல்லை; அதை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.