Arun Janardhanan
ஏ.கே. ஜாபர் சாதிக் தி.மு.க-வின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) பிரிவு நிர்வாகியாக இருந்தார். அவர் தி.மு.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் இருக்கின்றன. தி.மு.க அவரை கட்சியில் இருந்து வெளியேற்றினாலும், அது போதாது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: A walk-on role or more? DMK faces heat over a drug bust and a movie producer on the run
மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.கே.ஜாபர் சாதிக், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டால், எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.வுக்கு விமர்சிப்பதற்கான வாய்ப்பை வழங்கியதால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) ஒரு கூட்டு நடவடிக்கையில், மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. 50 கிலோ சூடோபீட்ரைனை மல்டிகிரைன் உணவு கலவையின் போலி பாக்கெட்டுகளில் அடைக்க முயன்ற சந்தேகத்துக்குரிய நபர்களை அவர்கள் கண்டுபிடித்தனர். மேலும், சர்வதேச சந்தையில் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச வலையமைப்பை முறியடித்ததாகக் கூறினர்.
இதையடுத்து, தமிழகத்தில், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் சாதிக் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம், என்.சி.பி குழுவினர் சென்னையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளரின் வீட்டிற்குச் சென்று சம்மனை வீட்டுக்கு வெளியில் ஒட்டியுள்ளனர்.
தயாரிப்பாளரிடமிருந்தும் பூட்டப்பட்ட அவரது வீட்டில் இருந்தும் எந்த பதிலும் வராததால், மத்திய முகமை அதிகாரிகள் புதன்கிழமை மாலை அவரது வீட்டிற்கு சோதனை செய்வதற்கான உத்தரவுடன் உள்ளே சென்றனர். ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் காய்ந்த தேங்காய் போல மாற்றி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு சூடோபீட்ரைன் கடத்தும் கும்பலில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தி.மு.க.வின் சென்னை மேற்குப் பிரிவுத் தலைவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அலுவலகத்தில் என்.சி.பி வியாழக்கிழமை சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அறிந்து அலுவலகத்திற்கு வந்த தமிழ் செய்தி சேனல் ஒன்றின் ஒளிப்பதிவாளர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.
இருப்பினும், தி.மு.க-வின் என்.ஆர்.ஐ பிரிவின் சென்னை மேற்கு துணை அமைப்பாளராக இருந்த சாதிக்கிற்கு தி.மு.க.வுடன் தொடர்பு உள்ளது. அவரது ஆன்லைன் கணக்குகள் பல தி.மு.க தலைவர்களுடனான புகைப்படங்களைக் காட்டுகின்றன.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த சர்ச்சையக் கட்டுப்படுத்தும் நம்பிக்கையில், தி.மு.க அவரைக் கட்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றியது. சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தலைவரின் பரிந்துரையின் பேரில் சாதிக் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தார் என்று தி.மு.க உயர்மட்டத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
“இது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டாக இருப்பதால், நாங்கள் நடவடிக்கைக்காக காத்திருக்கவில்லை. கடந்த ஜூன் மாதம்தான் சாதிக்கிற்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைத்தது. தி.மு.க.வில் சேர்வதற்கு முன்பே அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வெளியேற்றுவதைத் தவிர வேறு எதுவும் எங்கள் தரப்பில் இல்லை” என்று ஒரு தி.மு.க நிர்வாகி கூறினார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அரசியல் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை எடுத்துரைத்து, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க-வுக்கு முட்டுக்கட்டை போட எதிர்க்கட்சிகள் நகர்ந்துள்ளன. தமிழகம் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒரு செயலாளர் தி.மு.க.வுக்கு இருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சாதிக்கை கட்சியில் இருந்து நீக்கினால் போதும் என்று ஆளுங்கட்சியினர் நினைத்தால் அது தவறு என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தி.மு.க மற்றும் திரையுலகில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
திமுக மட்டுமல்ல, திரையுலகில் உள்ள சாதிக்கின் கூட்டாளிகளும் அவரிடமிருந்து விலகிவிட்டனர். சாதிக் தயாரித்த திரைப்படத்தை இயக்கிய அமீர், தனது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
2017-ல் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற அமீர், உணவகம் வணிகம் உட்பட சாதிக் செய்த பல முதலீடுகளை விசாரித்து வருவதாக என்.சி.பி வட்டாரங்கள் தெரிவித்தன. அமீர் தனது அறிக்கையில், தெரியாத காரணங்களுக்காக தனது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ம் தேதி நிறுத்தப்பட்டதாகவும், “செய்தியில் உள்ள குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், அதைக் கண்டித்து தண்டிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“