தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த 3 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையரின் செயலுக்கு எதிராக தி.மு.க சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று வக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்துதான், உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் தஅவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.