வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில், தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர்.
2011 தேர்தலில் போட்டியிட பன்னீர் செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரின் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016 ஆம் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது இவ்வளவு சொத்து உயர்வு சந்தேகத்தை எழுப்புகிறது.
மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.
அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் சேகர் ரெட்டியிடம் பன்னீர் செல்வம் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த மார்ச் 10 ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் நான் புகார் அளித்ததாகவும் அந்த புகார் மீது இதுவரை வழக்குபதிவு செய்யது நடவடிக்கை எடுக்கவில்லை.
பொது ஊழியருக்கு எதிராக புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டிய கடமை உள்ளதால், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.