திருமங்கலம் தொகுதியில் உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சமூக விரோதிகள் சேதப்படுத்தி, அங்கிருந்த காவலரை தாக்கி, காவல் நிலையத்தையே பூட்டிக்கொண்டு சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் காணச் சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், காவல்துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டு, கல்லுப்பட்டி பேரையூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆர்.பி. உதயகுமாரை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
"சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற செயல் வெட்கக்கேடானது. சமூக விரோதிகள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி, காவலரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை. தொகுதிக்கு நல்லது, கெட்டது என்றால் அது சட்டமன்ற உறுப்பினரின் கடமை அல்லவா? ஆனால், அந்தக் கடமையைச் செய்யக்கூட ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தடுக்கிறது.
இன்றைக்கு திமுக ஆட்சியில் ரவுடிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. சமீபத்தில் ஒரு வியாபாரி 20 வருடமாக கடை வைத்திருந்த நிலையில், ஒரு திமுக ரவுடி அவரிடம் மாமூல் கேட்டு, உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையங்கள், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என பல இடங்களுக்கும் மனு அனுப்பியுள்ளார். ஆனால், அந்த ரவுடி, 'நான் 16 கொலைகள் செய்துள்ளேன், உன்னை 17வது கொலையாக செய்யப் போகிறேன்' என்று மிரட்டியுள்ளார். இப்படித்தான் இந்த ஆட்சி மோசமாக உள்ளது.
இன்றைக்கு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் அந்த ரவுடி துப்பாக்கி எடுத்துச் சென்றுள்ளாரா? என்றுகூட கேள்வி எழுந்துள்ளது. ரவுடிகள் காலம் என்றால் அது திமுக காலம் என்று உருவாகிவிட்டது. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், எப்படி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்?
தற்போது தமிழ்நாடு நாடா? சுடுகாடா? என்று உருவாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல், பாலியல் தொல்லை நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதை கட்டுப்படுத்த தவறிய அரசாக திமுக அரசு உள்ளது.
அமெரிக்காவில் எரிமலை வெடித்தது போல, இன்றைக்கு மக்கள் மனதில் திமுக ஆட்சியின் மீது எரிமலை வெடித்து விட்டது. இன்றைக்கு நாடெங்கும் ஒரு விரல் புரட்சியாக மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வர வேண்டும், ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது.
மக்களை காக்கும் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகின்றது. ஆனாலும் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம். இப்போது காவல்துறைக்காவும் குரல் கொடுக்கிறோம்,’ இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.