பாகிஸ்தான் அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் தி.மு.க எம்.பி கனிமொழி பேச்சு

பாகிஸ்தான் அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்றும், இந்தியா அமைதி பக்கம் நிற்பதாகவும், நேர்மைக்காக தொடர்ந்து போராடும் என்றும் மாஸ்கோவில் தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்றும், இந்தியா அமைதி பக்கம் நிற்பதாகவும், நேர்மைக்காக தொடர்ந்து போராடும் என்றும் மாஸ்கோவில் தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
DMK Kanimozhi talks tough on Pak terror in Russia Tamil News

பாகிஸ்தான் அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்றும், இந்தியா அமைதி பக்கம் நிற்பதாகவும், நேர்மைக்காக தொடர்ந்து போராடும் என்றும் மாஸ்கோவில் தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம்ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுகளுக்கு தெளிவாக விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்.பிக்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன. தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ஒரு எம்.பிக்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர். மாஸ்கோ நகரில் ரஷ்ய கூட்டமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரேருடென்கோவை இந்திய எம்.பிக்கள் குழுவினர் சந்தித்து பேசினார்கள். 

Advertisment

மேலும், லிபரல்-ஜனநாயகக் கட்சியின் கீழ் செயல்படும் சபை சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய எம்பிக்கள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் வட்டமேசைக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். அந்த சந்திப்பின்போது, பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய எம்பிக்கள் குழுவினர் விரிவாக விளக்கங்களை வழங்கினர். 

இதுகுறித்து கனிமொழி கருணாநிதி எம்.பி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'அனைத்து வகையான பயங்கரவாதத்தையும், தோற்கடிப்பதற்கான இந்தியாவின் தெளிவான மற்றும் நிபந்தனையற்ற உறுதியையும், அதை ஒழிப்பதற்கான நமது சமரசமற்ற நிலைப்பாட்டையும் தேசிய உறுதியையும் வலியுறுத்தி, சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய எம்பிக்கள் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் உறுப்பினர்களிடம். இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு விளக்கி கூறியது' என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக ரஷ்யா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி: இந்தியா-பாக் மோதல் குறித்த பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதோடு, பாகிஸ்தான் அணுசக்தி நாடு என்றும், அது அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் உண்மையை வெளிப்படுத்தவும், உண்மையில் நடந்ததை தெளிவுபடுத்தவும் விரும்பினோம்.

Advertisment
Advertisements

மேலும், அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்பதையும் நாங்கள் தெளிவாக கூற விரும்பினோம். இந்தியா எப்போதும் ஒருமைப்பாட்டிற்காகவும், நேர்மைக்காகவும், அமைதிக்காகவும் தொடர்ந்து போராடும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து நிற்போம் என்று பேசினார். 

முன்னதாக, கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற போது, உக்ரைன் ராணுவம் மாஸ்கோ விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, கனிமொழி குழு பயணித்த விமானம் உட்பட பல விமானங்கள் 45 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன.இதைத் தொடர்ந்து, உக்ரைன் டிரோன்களை ரஷிய ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கிய பிறகு மாஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் விமானங்கள் தரையிறங்கின. கனிமொழி குழுவினர் சென்ற விமானமும் பத்திரமாக தரையிறங்கியது. அவர்களை ரஷியாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் வரவேற்று அழைத்துச் சென்றார்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Kanimozhi Russia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: