கோவை பால் கம்பெனி பகுதியில் தி.மு.க செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் சுமார் 32 இலட்சம் குடும்பங்கள் பாதித்தக்கப்பட்ட போது வராத பிரதமர், தற்போது தேர்தலுக்காக 5 முறை வந்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற போது கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.கேஸ், பெட்ரோல், டீசல் மானியங்கள தரவில்லை எனத் தெரிவித்தார்.
அனைத்து விலையேற்றத்திற்கும் காரணம் மோடி அரசு தான் என குற்றம் சாட்டிய அவர் சர்க்கரை, மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்தி விட்டார்கள் எனவும் கூறினார். பயிர் காப்பீடு, வீடு கட்டும் திட்டத்திற்கு அதிக நிதியை மாநில அரசு தான் தருவதாகவும், இப்படி இருக்க பிறகு எப்படி அண்ணாமலை சொல்வது போல மோடி பெயரை வைக்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
பாஜகவிற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்மந்தம்? என கேள்வி எழுப்பிய அவர் மதத்தின் பெயர், கோவில் பெயரை சொன்னால் தான் வாக்களிப்பார்கள் என்பதால் மதத்தை பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள். மதத்திற்காக கட்சி நடத்தும் ஒரே கட்சி பாஜக தான் எனவும் விமர்சித்தார். அதே சமயம் இந்து மக்களை திமுக அரசு புறக்கணிக்கவில்லை எனவும் கூறினார். இந்துக்களுக்கு மோடி அப்பாவோ, அம்மாவோ, சொந்தமோ அல்ல எனவும் மோடி ஆட்சி முடிய 60 நாட்கள் தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முறையாக பங்கி தருவதில்லை என கூறி பிற மாநிலங்களுக்கு வழங்க கூடிய தொகையையும் தமிழ்நாட்டிற்கு தரக் கூடிய தொகையையும் பட்டியலிட்டார்.
மழை வெள்ள பாதிப்பிற்கு ஒரு பைசா கூட தராத ஒன்றிய அரசை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அண்ணாமலை எப்போதும் பொய் தான் பேசுகிறார் என கூறிய அவர் அவருக்கு திமுக பற்றி பேச எந்தவொரு தகுதியும் இல்லை என்றார். அதிமுக ஆட்சியில் அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் மீதே குட்கா வழக்கில் விசாரணை நடைபெற்றது என கூறிய அவர், ஆட்சியில் இருந்த போது போதைப் பொருளை தடுக்க தவறிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை விமர்சிக்க தகுதியில்லை என்றார்.
மக்களையும், நாட்டையும் பாதுகாக்காமல் எந்த கவலையும் இல்லாமல் மோடி வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். விஷ்வ கர்மா திட்டம் மூலம் குல தொழிலை செய்ய சொல்லும் பிரதமர் மோடி நமக்கு தேவையா? எனவும் வினவினார். கோவைக்கு எந்த திட்டமும் செய்யவில்லை என எஸ்.பி.வேலுமணி சொல்கிறார், திமுக செய்த சாதனை குறித்து வேலுமணி உடன் விவாதிக்க தயார் எனவும் சவால் விடுத்தார். வேலுமணி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயார் எனவும் கூறினார். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றதாக தெரிவித்த அவர் கொள்ளை கூட்ட கும்பல் போல அதிமுக ஆட்சி நடத்தியதாகவும் தெரிவித்தார்.
போதை பொருள் கடத்தலுக்கும், முதல்வருக்கும் என்ன சம்பந்தம்? குட்கா விற்க டிஜிபி பணம் வாங்கியது அதிமுக ஆட்சியில் தான் நடந்தது எனவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும் எனவும் கூறினார். ஒன்றிய அரசிற்கு தெரியாமல் போதைப்பொருள் வர முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர் இது பற்றி பேச பாஜகவிற்கு யோக்கியதை இல்லை என்றார். மேலும் பாஜகவில் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தான் எனவும் விமர்சித்தார்.
முதல்வர் தந்த திட்டங்களால் அதிமுகவினரின் மனைவிகளே திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் எனவும் முதல்வர் தவறு செய்தவருக்கு ஆதரவு தரவில்லை எனவும் யார் தவறு செய்தாலும் முதல்வர் தண்டிப்பார் எனவும் கூறினார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை எனவும் கோடநாடு வழக்கில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தொழிலே ஏமாற்றுவது, துரோகம் செய்வது தான் அதற்காக அவருக்கு விருதுகள் வழங்கலாம் என்றார். எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்து விட்டு அழுது நாடகமாடி ஓட்டு வாங்குபவர் எனவும் கூறினார். தேர்தலில் போட்டியிட நானாக சீட் கேட்கமாட்டேன் எனத் தெரிவித்த அவர் முதல்வர் கூறுவதை செய்வேன் என்றார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“