திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அப்பகுதி தி.மு.க சார்பில் உறுப்பினர்கள் கூட்ட நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 1) தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருத்தணி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம் நாசர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தி.மு.கவுக்கு வலுவான சித்தாந்தம் இருப்பதால், தி.மு.க.வினர் துணிச்சலுடன் நடக்க முடியும் எனக் கூறி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து குற்றஞ்சாட்டி தீவிரமாக பேசி வந்தார். அப்போது, மேடையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் சதீஷ் அமைச்சரின் பின்பக்கம் சென்றார். அப்போது அவர், தவறுதலாக மைக் வயரை மிதித்ததில், மைக் கீழே விழுந்தது.
இதனால், கோபமடைந்த அமைச்சர், அவரை முதுகில் முழங்கை வைத்து தாக்கி, பேச்சை தொடர்ந்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் செயல் அங்கிருந்த கேமராவில் பதிவானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil